ஆயர் கெரோ, டிச.6-
ஆண்களுக்கு இணையாக மகளிருக்கு ஊதியம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்வதோடு அனைத்து வகையான பாலின பாகுபாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று கெஅடிலான் மகளிர் அணி வலியுறுத்தியது. இரு பாலினங்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி குறைக்கப்படுவது அவசியமாகும், ஏனெனில், குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் பால் புகட்டும் இடம் ஆகிய தேவைகளை நிறைவேற்றும் கடப்பாடு இருப்பதால், மகளிருக்கும் நிரந்தர வருமானம் தேவைப்படுகிறது என்று கெஅடிலான் மகளிர் அணி தலைவி ஹனிஸா முகமது தால்ஹா கூறினார்.
“நாம் கோருவதெல்லாம் வேலையிடத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே” என்றார் அவர்.
“எனவே, ஆண்கள் புரியும் அதே வேலையை செய்யும் மகளிருக்கு சம அளவில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு பாலின பாகுபாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதேவேளையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும்” என்று ஹனிஸா மத்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.