காப்பார், டிச.25-
டாருல் ஏசான் இலவச குடிநீர் திட்டத்திற்கு இன்னும் பதிந்து கொள்ள செமெந்தா சட்டமன்ற தொகுதி மக்கள், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் இத்திட்டம் மாதந்தோறும் 20 மீட்டர் தண்ணீரை இலவசமாகப் பெறும் வாய்ப்பை தகுதியுள்ளோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார்.
“இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள வேளையில், மாநில மக்கள், குறிப்பாக செமெந்தா தொகுதி வாழ் மக்கள் உடனடியாக இத்திட்டத்தில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“இதற்கு பின்னர், மாநில அரசாங்கம் விதித்துள்ள வரையறைகளுக்கு உட்பட்ட மக்களுக்கு மட்டுமே இலவச தண்ணீர் வழங்கும். முன்பு, டாருல் ஏசான் தண்ணீர் திட்டத்தில் பதிந்து கொண்டவர்களுக்கு இலவச தண்ணீர் வழங்கப்பட்டது” என்று அவர் விளக்கமளித்தார்.
இத்திட்டம் குறித்து விளக்கங்களையும் அறிவிப்புகளையும் சட்டமன்ற தொகுதி சமூக சேவை மையம் தொடர்ந்து செய்து வருவதாக டாரோயா தெரிவித்தார்.