ஷா ஆலம், ஜன.2-
டாக்டர் மஸ்லீ மாலேக் தனது கல்வியமைச்சர் பதவியைத் துறப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இன்றைய செய்தியாளர் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பரவிய பல ஆருடங்களுக்கு இவ்வறிப்பு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. நாட்டின் மூத்த தேசியவாதிகளில் ஒருவரும் தந்தையைப் போன்ற ஒரு தலைவரான பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் ஆலோசனையின் பேரில் இம்முடிவை தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருக்கும் கொள்கையின் அடிப்படையில் நான் எனது கல்வி அமைச்சர் எனும் பதவியை பிரதமரிடம் திரும்ப ஒப்படைக்கிறேன். இந்த பதவி துறப்பு நாளை ஜனவரி 3ஆம் தேதி நடப்புக்கு வரும்” என்றார் அவர்.
“எனது 20 மாத பதவி காலத்தில், தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்திய ஜாவி விவகாரம் போன்றவற்றைத் தவிர்த்து ‘அனைவருக்கும் கல்வி’ என்ற சுலோகத்திற்கு ஏற்புடைய அடிப்படை விஷயங்களை குறிப்பாக பள்ளிகளில் இணைய வசதி, இலவச காலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களையும் நான் வகுத்துள்ளேன் என்று நம்புகிறேன்” என்றும் அவர் சொன்னார்.