பெட்டாலிங் ஜெயா, ஜன.16-
தங்கள் குடியிருப்புகளில் வெடிப்பும் வண்டலும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பெட்டாலிங் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர். பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திடம் இது குறித்து பல்வேறு புகார்கள் அளித்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்பாளர்களில் ஒருவரான மோஹ்சின் அப்துல்லா (வயது 68) கூறினார்.
“இந்த அடுக்குமாடி நிர்வாகம் செயல்படாததால், எந்தவொரு தரப்பிடமும் புகார் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறோம்” என்றார் அவர்.
இதே குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் ஏ.ராமநாதன் (வயது 65) , இங்குள்ள மக்கள் எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்கி அச்சத்தில் வாழ்கின்றனர் என்றார்.
தற்போது வெளிச் சுவர்களிலும் தரைப் பகுதியில் உள்ள வீடுகளின் உட்புறத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வெடிப்பு 10ஆவது மாடி வரை பரவாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே, இவ்விவகாரத்தை ஊரட்சி மன்றக் கூட்டத்தில் விவாதிக்கவிருப்பதாக எம்பிபிஜே 10ஆவது வட்ட மாநகராட்சி உறுப்பினர் முகமது அகிர் பாவான் சிக் உறுதியளித்தார்.