காஜாங், ஜன.20-
விருந்துபசரிப்பிலான நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொண்டு, ஒதுக்கீடுகளை ஏழ்மையில் வாடும் தரப்பினருக்கு வழங்கி உதவிட வேண்டும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் தெரிவித்தார்.
பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகளை முன்னிட்டு நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் பாராட்டையும் பெற்றது என்றார் அவர்.
வழக்கமாக இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஓராண்டில் 20 முதல் 30 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், இவ்வாண்டு இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்ட போதிலும் அதன் தாக்கம் இன்னும் சிறப்பாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கான செலவினங்கள் குறைத்து. அந்த நிதியை சிரமப்படும் தரப்பினருக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது என்று இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில் கணபதிராவ் தெரிவித்தார்.
இதனிடையே, சிலாங்கூர் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு திட்டம் இவ்வாண்டு மேலும் பெரிய அணுகூலத்தை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சம்பந்தப்பட்ட திட்டத்தின் கணக்கறிக்கையை தாம் காண விருப்பதாகவும் ஆலோசனை தேவைப்படுவோருக்கு அச்சேவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.