ஷா ஆலம், ஜன.24-
சீனப்புத்தாண்டையொட்டி வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் (பிளஸ்) மற்றும் 2ஆவது கிழக்கு கரை நெடுஞ்சாலை (எல்பிடி2) ஜனவரி 25ஆம் தேதி 20 விழுக்காடு கழிவை வழங்குகிறது. இந்த நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 தொடங்கி இரவு 11.59 வரை 20 விழுக்காடு கழிவைப் பெறுவர் என்று பிளஸ் மலேசியா நிர்வாக இயக்குநர் டத்தோ அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.
“உதாரணமாக, நாளை இரவு மணி 7.00க்கு இந்த நெடுஞ்சாலைக்குள் நுழைந்து சனிக்கிழமை பின்னிரவு மணி 12.15க்கு கட்டணம் செலுத்துவோர் இச்சலுகையைப் பெறுவர்” என்றார் அவர். இந்தச் சலுகை, தனிப்பட்ட வாகனமோட்டிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, லெம்பா கிள்ளான் புதிய நெடுஞ்சாலை (என்கேவிஇ), சிரம்பான் –போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை, வடக்கு தெற்கு மத்திய தொடர்பு சாலை, மலேசிய –சிங்கப்பூர் இரண்டாவது தொடர்பு நெடுஞ்சாலை, பட்டர்வொர்த்- கூலிம் நெடுஞ்சாலை, பினாங்கு பாலம் மற்றும் 2ஆவது கிழக்கு கரை நெடுஞ்சாலை (எல்பிடி 2) ஆகியவையே இந்த சலுகைக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகள்.