ஷா ஆலம், மார்ச் 5:
சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்த மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். 43 பாக்காத்தான் சட்ட மன்ற உறுப்பினர்களின் வருகை அமிருடின் ஷாரிக்கான ஆதரவை வலுப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் அவரின் தலைமைத்துவத்தின் மீதான சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
” நீண்டகாலமாக இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலையை நாம் தவிர்த்து இருக்க முடியும். இன்று பெரும்பான்மையான சட்ட மன்ற உறுப்பினர் என்னுடன் உள்ளனர். மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட சம்பவத்தை நாம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 24 மணி நேரத்திற்குள் நாம் சிலாங்கூர் மாநில சிக்கலை தீர்த்து வைத்தது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்களின் ஒருமைப்பாட்டை காட்டுகிறது,” என்று மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அமிருடின் கூறினார்.
கெஅடிலான் கட்சியில் தாம் தொடர்ந்து நீடிக்கப் போவதை மறுஉறுதிப் படுத்திய அமிருடின் இதற்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு படுத்துவதை மறுத்தார்.