ஷா ஆலாம், மார்ச் 10:
வரி செலுத்தத் தவறுவோர் தங்களின் நிலப்பட்டாவின் உரிமையை இழக்க நேரிடும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எச்சரிக்கை விடுத்தார்.
இதன் பொருட்டு நில உரிமையாளர்கள் விரைவில் வரியைச் செலுத்துவதோடு மாவட்ட நில நிர்வகிப்பாளர்கள் ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பே எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று அமிருடின் கேட்டுக் கொண்டார்.
“மூன்று வருடங்களுக்கு வரி செலுத்தத் தவறினால் அதனை 6ஏ நோட்டிஸ் வாயிலாக திரும்பக் கோரலாம். அதோடு, 1965 ஆம் ஆண்டு தேசிய நில சட்டத்தின் நோட்டீஸ் 8 ஏ கீழ் நிலத்தைப் பறிமுதல் செய்யலாம்” என்று இங்கு பொருளாதார நடவடிக்கை மன்ற அறையில் நடைபெற்ற 2020 சிலாங்கூர் நில கண்காட்சியையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதி ஷா ஆலாம் சுதந்திர சதுக்கத்தில் முதன் முறையாக நடைபெறும் நில கண்காட்சி குறித்து பேசிய அவர், நில உரிமையாளர்கள் நிலம் அல்லது இட விவகாரம் குறித்து ஆலோசனை சேவை முகப்பிடத்தில் தெரிவிக்கலாம் என்றார்.
“நில உரிமையாளர் பெயர் மாற்றம், உரிமம் பெற்றிராத தொழிற்சாலை திட்டம் மற்றும் பரம்பரை சொத்து” போன்ற விவகாரங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படும்” என்றார் அவர்.