ஷா ஆலம், மார்ச் 10-
கோவிட்-19 கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜுல்கிப்ளி அகமது தலைமையில் சிறப்பு பணிப்படை ஒன்றை சிலாங்கூர் கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை மன்றம் தோற்றுவித்தது.
இந்த தொற்று கிருமி பரவல் குறித்த ஆகக் கடைசியான கூட்டத்திற்குப் பின்னர் இந்நியமனம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
நான்கு சுகாதார நிபுணர்கள், மாநில சுகாதாரத் துறை பிரதிநிதி மற்றும் மாநில பேரிடர் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய இச்சிறப்பு குழுவிற்குத் தலைமையேற்ற டாக்டர் ஜூல்கிளி இணக்கம் தெரிவித்ததாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். நாட்டில் இந்நோய் கண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 117 நோயாளிகளில் 60 பேர் சிலாங்கூரில் வசிப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதால், இந்நடவடிக்கையை எடுக்க மாநில அரசு முடிவெடுத்தது என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
சிலாங்கூர் ஸ்மார்ட் உத்தரவு மையத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்பட்டும் இச்சிறப்புக் குழு உடனடியாக அமலுக்கு வந்ததாக அமிருடின் கூறினார்.
“இது தவிர்த்து பள்ளி மற்றும் பொது இடங்களில் கோவிட்-10 பரவலைத் தடுப்பது குறித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறோம்” என்றார் அவர்.