ஷா ஆலம், ஏப்.6-
மாநில அரசாங்கம் தொடக்கியுள்ள கோவிட்-19 சிறப்பு நிதிக்கு இதுவரை மொத்தம் 8.07 மில்லியன் ரிங்கிட் திரண்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கோவி-19 தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இந்நிதி தொடங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் ஊதியத்தில் இருந்து 50 விழுக்காடு பிடித்தம் வழி இந்நிதி தொடங்கப்பட்டது. இந்நிதிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தில் 30 விழுக்காட்டை வழங்கியுள்ளனர் என்றார் அவர்.
2 மாத கால கட்டத்திற்கான இந்நிதிக்கு அரசாங்கம் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு தொடர்பு நிறுவன அதிகாரிகள் ஆகியோர் தங்கள் வருமானத்தில் 30 விழுக்காட்டை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கிரேட் 44 தொடங்கி கிரேட் 54 வரையிலான பணியாளர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 50 ரிங்கிட் முதல் 100 ரிங்கிட் வரை வழங்க ஊக்குவிப்படுகின்றனர் என்றார் அவர்.