ஷா ஆலம், ஏப்.16-
கோவிட்-19 சிலாங்கூர் பரிவுமிக்க உதவித் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று மாத வாடகை ஒத்திவைப்பு சலுகையினால் விவேக வாடகை திட்டத்தின் பங்கேற்பாளர்கள் 108 பேர் பயனடைவர்.
இந்த 108 பேருக்கும் இயல்பாகவே விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய 314 பேரும் தங்கள் கட்டணங்களை வழக்கம் போல் தொடர வேண்டும் என்று சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாகி cஆன் முகமது ஃபாட்ஸில் முகமது யூசோப் கூறினார்.
தொடர்ந்து வாடகை செலுத்தும் தேர்வை தேர்ந்தெடுத்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாடகை திட்டம் முடிவுற்றதும் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்றார் அவர்.
கோவிட்-19 தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரூமா சிலாங்கூர்கூ வீடுகளை உடைமையாக்கிக் கொள்ள வசதியில்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு முதல் வாடகை செலுத்தி பின்னர் அவற்றை வாங்குவதற்கு விவேக வாடகை திட்டம் வாய்ப்பளிக்கிறது.