ஷா ஆலம், ஏப்ரல் 20:
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் 1,835 நபர்களுக்கு கோவிட்-19 தொற்று நோய் சமூக பரிசோதனையை செல்கேர் கிளினிக் நிறுவனம் நடத்தி உள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த பரிசோதனைகள் கிள்ளான், பூச்சோங் பிரிமா, பெட்டாலிங் மற்றும் ஷ ஆலம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
” சமூக பரிசோதனை கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 1,835 நபர்களுக்கு செய்யப் பட்டது. பரிசோதனைகள் வீடு வீடாக செல்வதும் அல்லது காரில் அமர்ந்து கொண்டு செய்வதும் அடங்கும். மேற்கண்ட பரிசோதனைகள் மலேசிய சுகாதார அமைச்சின் நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன. மூத்த குடிமக்களை குறி வைத்து இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது,” என்று மந்திரி பெசார் தமது டிவிட்டரில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11-இல் சிலாங்கூர் மாநில அரசாங்கம் உலு லங்காட்டில் மலேசியாவிலே முதன் முதலாக மிகப்பெரிய அளவில் கோவிட்-19 தொற்று நோய் சமூக பரிசோதனையை தொடங்கியது. காஜாங், சுங்கை ராமால் மற்றும் டூசுன் துவா சட்ட மன்றங்களில் இந்த பரிசோதனைகள் நடைபெற்றன. இரண்டு நாட்களாக இடம் பெற்ற சமூக பரிசோதனையில் 649 நபர்களுக்கு நடத்தப்பட்டது. செல்கேர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் முவாஸ் ஓமார், ரமலான் மாதத்திற்குள் 5,000 நபர்களுக்கு கோவிட்-19 தொற்று நோய் சமூக பரிசோதனைகள் நடத்த இலக்கு வைத்துள்ளதாக கூறினார்.