அலோர் ஸ்தார், மே 6:
கடந்த மார்ச் 21 தொடங்கி கெடா மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஐந்து கோவிட்-19 நோய் தனிமைப்படுத்தும் மையங்கள் மூடப்பட்டன. கடந்த 14 நாட்களுக்குள் 411 நபர்கள் இந்த தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில மலேசிய பொது பாதுகாப்பு படையின் இயக்குநர் லெப்டினன்ட் கெலனல் அவாங் அம்புவான் யாக்கோப் கூறினார். இன்று இறுதியாக 18 நபர்கள் ஸ்ரீ மலேசியா தங்கும் விடுதி மற்றும் அமினூடின் பாக்கி கல்லூரி ஜித்ரா ஆகிய இடங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பினார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” ஐந்து தனிமைப்படுத்தும் மையங்களான ஜித்ரா அமினூடின் பாக்கி கல்லூரி, அலோர் ஸ்தார் ஸ்ரீ மலேசியா தங்கும் விடுதி, அலோர் ஸ்தார் சிட்டி தங்கும் விடுதி, வடக்கு மண்டல மேம்பாட்டு பயிற்சி மையம் அலோர் ஸ்தார் மற்றும் சுங்கை பட்டாணி போதைப் பொருள் எதிர்ப்பு ஏஜென்சி ஆகியவை அடங்கும். தனிமைப்படுத்தப் பட்டவர்கள் அனைவரும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆகும். அனைவரும் மொத்தமாக 47 நாட்களுக்குள் தனிமைப்படுத்தப் பட்டனர்,” என்று அவர் கூறினார்.