பத்து கேவ்ஸ், மே 7:
பத்து கேவ்ஸ் கம்போங் சுங்கை கெர்தாஸ் பகுதியில் அமைந்துள்ள பத்து ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை முடிவுற்ற நிலையில் சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பிறந்துள்ளது என்று சிிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூலில் பதிவு செய்தார்.
” மழை பெய்த பிறகு ஏற்படும் திடிர் வெள்ளம், ஆற்றை அகலப்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும். இந்த நடவடிக்கையின் வழி சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் மக்களின் நலன் பேணிக் காக்கப்படும்,” என்று தமது அறிக்கையில் சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினருமான அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 25-இல் இருந்து சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியின் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இதே போன்று கம்போங் சுங்கை கெர்தாஸ், சுங்கை துவா தம்பாஹான், கம்போங் லக்க்ஷமனா, கம்போங் நாகோடா, கம்போங் அராப் மற்றும் கம்போங் இந்தியன் செட்டல்மெண்ட் ஆகிய கிராமங்களும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 27-இல் மாநில அரசாங்கம் மேற்கண்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி காணப்படும் என்று அறிவித்தது.