பெட்டாலிங் ஜெயா, மே 10:
நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிடி) பின்பற்றி பெட்டாலிங் ஜெயாவின் ஓத்மான் சாலை சந்தை பகுதியில் வசிப்பவர்களுக்கு மொத்தம் 1,200 உணவுக் கூடைகள் இன்று விநியோகிக்கப்பட்டன. சமூக நலத்துறை (ஜேகேஎம்) உடன் இணைந்து இந்த முயற்சியில் அந்நிய நாட்டவர்களுக்கும் மற்றும் அகதிகளுக்கும் வழங்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.
“ ஜாலான் ஓத்மான் சந்தை பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் உள்ளவர்களும் அமைதியாக இருக்க வேண்டும். அதிகாரிகள் வகுத்துள்ள விதிகளுக்குக் கீழ்ப்படியவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் வீட்டிலேயே இருப்பது மிக முக்கியம். ஏற்கனவே 26 புதிய கோவிட் -19 நோய் சம்பவங்களை பதிவு செய்துள்ள நிலையில் தொற்று நோய் சங்கிலியை உடைக்க அதிகாரிகளுடனான ஒத்துழைப்பு முக்கியமானது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ உணவு கூடைகளை தேவைப்படும் குடும்பங்களுக்கு விநியோகிக்க கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி. அவற்றில் தன்னார்வ தொண்டர் படை (ரேலா), ஜேகேஎம்., சைல்ட்லைன் மற்றும் பிஜே ஓல்ட் டவுன் ருக்குன் தெத்தாங்கா ஆகியவை அடங்கும். எந்தவொரு உணவு அல்லது மருத்துவ உதவிக்கும், தயவுசெய்து எனது அலுவலகத்தை 01111403861 என்ற எண்ணில் அழைக்கவும். நாங்கள், ஜேகேஎம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) உடன் நெருக்கமாக பணியாற்றுவோம்” என்று அவர் கூறினார்.
ஒத்மான் சாலை சந்தை பகுதியில் பெட்டாலிங் ஜெயாவில் பிகேபிடியை செயல்படுத்த சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் முடிவு செய்தது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) தெரிவித்தார். இந்த உத்தரவு இன்று முதல் மே 23 வரை நடைமுறைக்கு வந்துள்ளது. இது இப்பகுதியில் சுமார் 2,900 குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களை பாதிக்கிறது என்று டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.