ஷா ஆலம், மே 12:
சிலாங்கூரில் வணிகம் செய்யும் வெளிநாட்டினரைக் கண்டறிய நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பி.கே.பி.டி) ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் மாநில அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்தது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். கடந்த ஆண்டு இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். ஆனால் போதுமான அளவு ஊராட்சி மன்றங்களின் அமலாக்க அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அரசு இலாகாக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக அமலாக்க நடவடிக்கைகள் சரியாக செய்யப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” ஊராட்சி மன்றங்களின் அமலாக்க அதிகாரிகள் ஏறக்குறைய 200 முதல் 300 பேர்கள் வரை அல்லது அதிகபட்சம் 500 பேர்கள் மட்டுமே உள்ளனர். அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பு வேண்டும். குடிநுழைவு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாடு மற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். உரிமம் பெறாத கடைகள் மற்றும் சந்தைகளை கண்காணிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று நன்கொடை விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிலாங்கூர் மாநில அரசு ஒருபோதும் வெளிநாட்டினருக்கு வணிக உரிமங்களை வழங்கவில்லை, ஆனால் மற்றவர்கள் அந்த நோக்கத்திற்காக வணிக உரிமங்களை வழங்கி வர்த்தகம் செய்கின்றனர். சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு பேனாசோனிக் போன்ற ஒரு பெரிய நிறுவனங்கள் நடத்துவதற்கான உரிமத்தை மட்டுமே அளிக்கிறது, இதில் அதிக முதலீடு மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. சில்லறை மற்றும் அங்காடி வணிகங்களின் வியாபார உரிமம் நிச்சயமாக உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் படுகின்றன, ”என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.