புத்ராஜெயா, மே 26:
நோன்பு பெருநாளுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று பொதுச் சேவை இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே பி.பி) போது மாநிலத்தின் எல்லை தாண்டும் தடையை மீறி, தங்கள் ஊர்களில் சிக்கியதற்கான காரணங்களைக் கூறும் அரசு ஊழியர்களின் போக்கு ஏற்கப்படாது என்றார்.
“ கடந்த மார்ச் 17 தேதியிட்ட பொது சேவைத் துறை சுற்றறிக்கையில், பொதுச் சேவை துறைத் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப, அதிகாரிகள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ பணிக்கு வர முடியாவிட்டால், அவர் பணியில் இருந்து விலகி இருப்பதாகக் கருதப்படுவதோடு, பொது ஆணை பிரிவு D (அரசு அலுவலர்கள் விதிமுறைகள் 1993-ன் கீழ் சில அபராதங்களுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.”
பிகேபிபி நடைமுறைகளை மீறும் அரசு ஊழியர்களின் நடவடிக்கைகள், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் குற்றம் என்றும், நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.