புத்ராஜெயா, ஜூன் 23:
மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலைத் திட்டமிட பள்ளித் தரப்பினருக்கு உதவும் வகையில் கல்வி அமைச்சு 2020-ஆம் ஆண்டு பள்ளித் தவணைக்கான கால அட்டவணையில் திருத்தம் செய்திருக்கிறது. இரண்டாம் பள்ளி தவணைக்கான விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை ஆகியவை அந்த திருத்தத்தில் உட்படுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு, இந்த இரண்டாம் தவணை பள்ளி விடுமுறை ஒன்பது நாட்களிலிருந்து ஐந்து நாட்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.அதைத் தவிர்த்து, ஏ குழுவைச் சேர்ந்த (ஜோகூர், கெடா, கிளந்தான், திரெங்கானு) பள்ளிகளுக்கான விடுமுறை 42 நாட்களிலிருந்து 14 நாட்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. பி குழுவைச் சேர்ந்த மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர், கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மாநிலங்களுக்கான பள்ளி விடுமுறை 41 நாட்களிலிருந்து 13 நாட்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.
திருத்தம் செய்யப்பட்ட 2020-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை அட்டவணையின்படி, அனைத்து பள்ளிகளிலும் 168 நாட்கள் நேரடியாக கற்றல் கற்பித்தல் நடைபெறும். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஆகிய காலகட்டத்தில், ஏ குழுவைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 56 நாட்களும் பி குழுவைச் சேர்ந்த பள்ளிகளுக்கு 55 நாட்களும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வீட்டிலிரிந்து மேற்கொள்ளப்பட்ட கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின் மொத்த நாட்களின் எண்ணிக்கை ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதர மாணவர்களுக்கான மொத்த நாட்களின் எண்ணிக்கை அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும் நாளைப் பொருத்தது என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.