புத்ராஜெயா, ஜூலை 11:
இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாட்டில், மக்கள் தொகை கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது குறைவாகவே காணப்படுகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு நகர்புறங்களில் வசிப்போர் அளவோடு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதும் இந்த எண்ணிக்கை குறைவிற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, பெரும்பாலான தம்பதியர் நான்கிற்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பினாலும், நிதிப்பிரச்னைக் காரணமாக இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளோடு நிறுத்திவிடுவதாக தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர் அப்துல் ஷுக்குர் அப்துல்லா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, சிறுவர் பராமரிப்பு மைய கட்டணமும் நாளுக்கு நாள் கூடுதலாகவே வசூலிக்கப்படுவதும் பெற்றோருக்கு மிகுதியான நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
ஐந்தாவது மலேசிய குடும்ப மற்றும் குடியிருப்பாளர் ஆய்வின்படி, நிதிச்சுமை மட்டும் ஒரு காரணமாக இல்லையென்றால், அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக 65 விழுக்காட்டு திருமணமானவர்கள் கூறியிருந்தனர்.
அதுமட்டுமின்றி, தாமதமாக திருமணம் செய்வது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவது மற்றும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனைப் போன்ற காரணங்களும் பெரும்பாலான தம்பதியர் அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது.
எனவே, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண, அதிகமான பிள்ளைகளை மலேசியர்கள் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான உதவி நிதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
— பெர்னாமா