ஷா ஆலம், ஜூலை 11:
கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தாலும், மாநில மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள் என அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய இந்த வைரஸ் இன்னும் முழுமையாக அழிந்து விடவில்லை என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) தெரிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் எந்த நேரத்திலும் மக்களிடையே பரவும் ஆற்றலைக் கொண்டது எனற நிதர்சனமான உண்மையை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அது நினைவு படுத்தியது.
” தற்போதைய சூழலில் அலட்சியமாக இருக்காதீர்கள். அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் வரையில் எச்சரிக்கையாக இருங்கள். நம்மிடையே இன்னும் கோவிட்-19 வைரஸ் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நோய் பரவலாம்,” என்று டிவிட்டரில் எஸ்திஎப்சி பதிவு செய்துள்ளது.
சிலாங்கூர் இன்று மூன்று புதிய கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களை பதிவு செய்துள்ளது. அதில் இரண்டு செப்பாங் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமில் ஏற்பட்டுள்ள அந்நிய நாட்டவர்களை சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஆகும். இன்று வரை மொத்தம் 2,079 கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் சிலாங்கூரில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.