ஷா ஆலம், ஜூலை 20:
ஷா ஆலமில் உள்ள கடை வரிசைச் சுவர் ஒன்றில் வரையப்பட்ட ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அச்சுவற்றில் வரையப்பட்டிருந்த மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷாவின் ஓவியம் மீதும் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டு, சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவர் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று, இன்று டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
முகமட் சுஹாய்மி அலி, அப்துல் ஹடி ரம்லி, மற்றும் முகமட் ஃபிர்டாவுஸ் நொர்டி ஆகிய மூவரால் இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. மாமன்னரை தவிர்த்து, பிரதமர் டான் ஶ்ரீ முஹீடின் யாசின், சுகாதாரத் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா மற்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி ஆகியோரின் உருவங்களும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன.
சேதப்படுத்தப்பட்ட அந்த ஓவியங்கள் மீது, வெள்ளை நிற சாயம் பூசப்பட்டிருப்பதாக ஷா ஆலம் நகராண்மைக் கழகம் ஓர் அறிக்கை வழி தெரிவித்திருக்கிறது. மேலும், இச்சம்பவம் குறித்து, ஷா ஆலம் செக்ஷன் 6 போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.