ஷா ஆலம், அக் 9- கிள்ளானில் நிபந்தனையுடன் கூடிய பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் சாலைத் தடுப்புகளை பிரச்சனையின்றி கடப்பதற்கு ஏதுவாக முதலாளியின் கடிதத்தை கொண்டிருப்பது அவசியம். முதலாளியிடமிருந்து கடிதம் பெற்றவர்கள் வேலையிடம் செல்வதற்கு போலீஸாரிடமிருந்து அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் அஸாம் கூறினர். எனினும், முதலாளியின் ஒப்புதல் கடிதம் அல்லது வேலை அனுமதி அட்டையை கொண்டிராதவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கான மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் முகநூலில் இருந்து பாரங்களை பதிவிறக்கம் செய்து அல்லது சாலைத் தடுப்புகளில் பாரங்களைப் பெற்று அனுமதிக்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்று அவர் சொன்னார். வட கிள்ளான் மற்றும் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகங்களின் முகநூலி்ல் இருந்து இந்த பாரங்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அவர் ஆலோசனை கூறினார். கிள்ளான் வட்டாரத்தில் இன்று தொடங்கி வரும் 23 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பணி நிமித்தமாக வெளியே செல்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். பாயு பெர்டானா, புக்கிட் திங்கி, ஸ்ரீ அண்டாலஸ் ஆகிய பகுதிகளில் சாலைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.