ஷா ஆலம், அக் 19- நீர் விநியோகத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பயனீட்டாளர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் நீர் விநியோகத்தை முழுமையாக பெறுவர் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார். நீர் தூய்மைக்கேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களும் சில மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும். இதற்கிடையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் லோரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் செய்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். எனினும், லோரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தில் மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வருகை புரிந்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆயர் சிலாங்கூர் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் ஆற்று நீரில் வாடை கலந்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், மூன்று தொழிற்சாலை பகுதிகளிலிருந்து அந்த கலவை நீரில் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1085446_KL39_06102020_TINJAUAN_AIR-lpr-960x640.jpg)