ரவாங், அக் 20- பத்து ஆராங் பகுதியில் உள்ள மலைச் சாரல்களை வலுப்படுத்துவது. மற்றும் இங்குள்ள செலாயாங் நகராண்மைக் கழக கடைத் தொகுதியில் கால்வாய் அமைப்பது போன்ற பணிகளுக்காக சிலாங்கூர் அரசு மூன்று லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
பத்து ஆராங் பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய இத்திட்டம் இம்மாதம் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்திருக்க வேண்டும். எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இத்திட்ட அமலாக்கத்தில் சுணக்கம் ஏற்பட்டது என்றார் அவர்.
அந்த கடைத் தொகுதியின் பின்புறம் சுமார் 110 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து மலைச் சாரல் பகுதியை வலுப்படுத்துவது ஆகிய பணிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த கடைகளுக்கு பின்புறம் கட்டப்பட்ட கழிப்பிடங்களில் நீர் கசிவு ஏற்பட்டதோடு அருகிலுள்ள மலைச் சாரல்களிலும் மண் சரிவு ஏற்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.