கோலாலம்பூர், அக் 25- நாடு முழுவதும் அல்லது நாட்டின் ஒரு பகுதியில் அவசர காலத்தை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் தற்போதைக்கு எழவில்லை என்று பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா அறிவித்துள்ளார்.
நாட்டின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளும்படி அனைத்து அரசியல்வாதிகளையும் பேரரசர் அறிவுறுத்தியுள்ளதாக இஸ்தானா நெகாராவின் அரச அதிகாரி டத்தோ அகமது பட்சில் சம்சுடின் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஏதுவாக கொள்கைகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடிய ஆற்றல் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு உள்ளது என்று பேரரசர் நம்புகிறார் என்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் டத்தோ அகமது கூறினார்.
நாட்டில் அவசர காலத்தைப் பிரகனடப்படுத்துவது தொடர்பான விண்ணப்பத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கடந்த வெள்ளியன்று பேரரசரின் மேலான பார்வைக்கு கொண்டு வந்தார் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கோவிட்- 19 நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 150(2பி) பிரிவின்படி அவசர கால அமலாக்கம் 150(1) மற்றும் அவசர காலச் சட்ட உத்தரவின் (2020ஆம் ஆண்டு அத்தியாவசிய அதிகாரங்கள்) படி இந்த விண்ணப்பத்தை பிரதமர் மாமன்னரிடம் தாக்கல் செய்தார் என்று அவர் மேலும் சொன்னார்.
நாட்டின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடிய அவசியம் இல்லை என்று பேரரசர் கருதுவதாகவும் டத்தோ அகமது தெரிவித்தார்.
கோவிட்- 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதிலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மிக முக்கிய பங்கினை வகிக்கும் என பேரரசர் வலியுறுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.