ஷா ஆலம், நவ 5- உலு லங்காட் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கவும் அவர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த தொகை உதவி புரியும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். மாநில அரசின் பேரிடர் நிர்வாக விதிமுறையில் நிர்ணயிக்கப்பட்டபடி 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுகிறது. எனினும், சமூக நலத்துறையும் ஏழு அரசு சாரா அமைப்புகளும் உடனடி உதவியாக சுவாசக் கவசங்கள், கிருமி நாசினி, சோப்பு போன்ற பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றன என்றார் அவர். உலு லங்காட், சுங்கை செராய் தேசிய பள்ளியில் தங்கியிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பின்னர் செய்தியாளர்களிடம்அவர் இதனைத் தெரிவித்தார். இப்பள்ளியில் 60 குடும்பங்கள் தங்கியிருக்கும் வேளையில் மேலும் 50 குடும்பங்கள் காம்ப்ளெக்ஸ் பெங்குலுவில் தங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார். வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னரே பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|
|
|