ஷா ஆலம், நவ- நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையை இந்துக்கள் இவ்வாண்டு தனித்துவத்துடன் கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த தீபத் திருநாள் கடந்த காலங்களைப் போல் பாரம்பரிய முறையில் அல்லாமல் புதிய பொருள் தரும் வகையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தீபாவளியின் போது எனது பத்து கேவ்ஸ் தொகுதியில் உள்ள நண்பர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறுவேன். ஆனால், இம்முறை புலனம் மற்றும் காணொளி வாயிலாக மட்டுமே வாழ்த்து தெரிவிக்க முடியும் என்றார் அவர்.
இதே நிலைதான் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். பொது முடக்கம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக உறவினர்கள் மற்றும் அண்டை அயலாருடன் தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலை உண்டாகியிருக்கும். எது எப்படியிருப்பினும், நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு 2020 தீபாவளியை தனித்துவத்துடன் கொண்டாடுவோம் என அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.