ஷா ஆலம், ஜன 3– புதிய பள்ளித் தவணை தொடங்கப்படுவதை முன்னிட்டு சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 200 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (பி40) உதவ 20,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் மற்றும் பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பு ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ கூறினார்.
இத்திட்டத்தின் வாயிலாக சரியாத தரப்பினர் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக உதவி பெறுவோர் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பு பள்ளிகளிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
பிள்ளைகளின் கல்வித் தேவைக்கு வேண்டிய பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக சம்பந்தப் பட்ட பெற்றோர்களுக்கு தலா 100 வெள்ளி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் புக்எக்சஸ் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய 200 புத்தகங்கள் தொகுதியிலுள்ள 27 பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உதவி மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குகிறது. இதன் வழி பள்ளிகளுக்கு உதவும் அதே வேளையில் மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்க முடியும் என்றார் அவர்.