ஷா ஆலம், பிப் 2– கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதில் சிலாங்கூர் அரசின் தடுப்பூசி இயக்கம் பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த தடுப்பூசி இயக்கம் உள்ளூர் மக்களை மட்டுமின்றி கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அந்நியத் தொழிலாளர்களையும் உள்ளடக்கியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தடுப்பூசித் திட்டத்தில் அந்நியத் தொழிலாளர்களையும் சேர்ப்பதானது சொந்த மக்களை புறக்கணிப்பதாக பொருள் படாது. நாம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் அந்நியத் தொழிலாளர்கள் நோயைப் பரப்பக் கூடியவர்களாகவும் இருந்தால் நமது நோக்கம் பயனற்றுப் போய்விடும் என்றார் அவர்.
எனினும், இந்த இந்த தடுப்பூசிகள் உள்நாட்டினருக்கு இலவசமாக வழங்கப்படும் வேளையில் அந்நியத் தொழிலாளர்களுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்படும் என்றார் அவர்.
சிலாங்கூரில் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முப்பது லட்சம் முதல் ஐம்பது லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்படும் என்று மந்திரி புசார் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.