ஷா ஆலம், பிப் 15- வேலையில்லாப் பிரச்னை தொடர்ந்து அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு ஏதுவாக அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
நாடு கோவிட்-19 பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையில்லாப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கும் இந்த அணுகுமுறை மிக அவசியம் என்று அவர் கூறினார்.
இவ்விவகாரத்தை நாம் சிறப்பான முறையில் கையாளத் தவறினால் நாட்டில் ஆள்பலச் சந்தையை மீட்சியுறச் செய்யும் முயற்சிகள் தாமதமடையக்கூடும் என்று அவர் சொன்னார்.
மலேசிய புள்ளிவிபரத் துறையின் ஆகக்கடைசி ஆய்வின்படி வேலையில்லாதோர் எண்ணிக்கை நாட்டில் 4.8 விழுக்காடாக அதாவது 7 லட்சத்து 72 ஆயிரத்து 900 பேராக உயர்ந்துள்ளது.
நாட்டில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 0.1 விழுக்காடு அதிகரித்து 1 கோடியே 52 லட்சத்து 20 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது. இந்த 0.1 விழுக்காடு 19,300 பேரை பிரதிபலிக்கிறது.