ஷா ஆலம், மார்ச் 16- அவசர கால அமலாக்கத்தின் போது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கூட்டுவதன் அவசியம் குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் சட்டமன்றத்தைக் கூட்டுவது குறித்து பரிசீலிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஆலோசனையை பெறுவதற்காக தாம் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
சட்டமன்றக் கூட்டத்தை இம்மாதம் கூட்ட வேண்டும். எனினும் அவசர கால அமலாக்கம் காரணமாக அதனை ஒத்தி வைக்கலாம். எனினும் இக்காலத்தில் சட்டங்களை அமல் செய்ய முடியும் என்றார் அவர்.
அவசியம் இருக்கும் பட்சத்தில் சட்டமன்றக் கூட்டத்தை நடத்தலாம். எனினும், இதன் தொடர்பில் சுல்தானின் ஆலோசனை முன்னதாக பெறப்பட்டு பின்னர் இக்கோரிக்கை மாமன்னரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டமன்றக் கூட்டம் நடைபெறாத பட்சத்தில் அதற்கு மாற்று நடவடிக்கையாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு கேள்வி பதில் அங்கம் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த கேள்வி பதில் அங்கத்தை அதிகாரப்பூர்வமாகவோ அதிகாரப்பூர்வற்ற முறையிலோ நடத்தலாம். சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை பெறுவதற்கான சிறந்த வழிமுறையாக இது அமையும் என்றார் அவர்.