ஷா ஆலம், ஏப் 5– யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் 244 கல்வி போதனையாளர்களும் பணியாளர்களும் கடந்த வியாழக்கிழமையன்று ஊழலுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
ஒவ்வொரு பணியாளரும் ஊழல் நடவடிக்கைளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற அரசாங்கம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உயர்கல்விக்கூட பணியாளர்கள் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டதாக பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிடுவான் ஓத்மான் கூறினார்.
இதனை வெறும் உறுதிமொழியாக மட்டும் கருதாமல் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நமது ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பணியாளர் என்ற முறையில் நமது பொறுப்புகளை ஆற்றும் போது உயர்நெறியை அடிப்படை கூறாக கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த உறுதி மொழி சடங்கு பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் வளாகத்தின் வேந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையைத்தின் தலைவர் டத்தோ அலியாஸ் சலிம் முன்னிலையில் நடைபெற்ற இந்த சடங்கிற்கு பேராசிரியர் முகமது ரிடுவான் தலைமை தாங்கி உறுதி மொழியை வாசித்ததோடு உறுதி மொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.