ECONOMYPBTSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் புகைப்படப் போட்டி- 35,000 வெள்ளி பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம்,  ஏப் 5– – ஷா ஆலம் மாநகர் மன்றம் புகைப்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில் வெல்வோருக்கு 35,000 வெள்ளி ரொக்கம் மற்றும் சான்றிதழை பெறும் வாய்ப்பு காத்திருக்கிறது.

‘நாங்கள் ஷா ஆலம் நகரை நேசிக்கிறோம்‘ எனும் கருப்பொருளிலான இந்த போட்டி மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் முதல் தேதி வரை நடைபெறும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவு தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டி ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு, நிகழ்வுகள் மற்றும் புதிய இயல்பிலான கலாசாரம் ஆகியவற்றை புகைப்படங்கள் மையமாக கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் கருப்பொருள், ஆக்கத்திறன், தனித்துவம் மற்றும் புகைப்பட நுட்பம் ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசை வெல்வோருக்கு 3,000 வெள்ளி ரொக்கமும் இரண்டாம் பரிசு பெறுவோருக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் மூன்றாம் பரிசு பெறுவோருக்கு 1,000 வெள்ளி ரொக்கமும் ஆறுதல் பரிசாக ஐவருக்கு தலா 200 வெள்ளியும் வழங்கப்படும் என்றார் அவர்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இது குறித்த மேல் விரங்களைப் பெறுவதற்கு www.mbsa.gov.my.  எனும் அகப்பக்கத்தை நாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :