கோலாலம்பூர், ஏப் 11– கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதோடு தங்கள் சொந்த பிரச்னைகளை கட்சிக்குள் கொண்டு வரக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் கட்சியின் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தும் என்பதோடு கட்சிக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கட்சியின் கொள்கைகளையும் தனிப்பட்ட பிரச்னைகளையும் வேறுபடுத்தி பார்க்கும் பக்குவம் இல்லாவிட்டால் நாம் பெரும் பிரச்னையை எதிர்நோக்க வேண்டி வரும் என்று அவர் சொன்னார்.
துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே 2018 இல் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும். மறு எழுச்சியின் வழி நமது பலத்தை காட்டியதோடு அதில் வெற்றியும் பெற்றோம் என்றார் அவர்.
கெஅடிலான் கட்சியின் பத்து தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் மற்றும் தொகுதி தலைவர் தியான் சுவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்சி உறுப்பினர்கள் தங்கள் பலத்தை ஒன்று திரட்டும் அதேவேளையில் கட்சியின் கோட்பாடுகளை தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அமிருடின் வலியுறுத்தினார்.
நாம் அடுத்த பொதுத் தேர்தல் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டால் கூட நாம் தயார் நிலையில் உள்ளோம் என அவர மேலும் தெரிவித்தார்.