ஷா ஆலம்,, ஏப் 14- இயங்கலை வாயிலாக நடைபெற்ற 50 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயைத்தை பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது இம்மாதம் 12ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
எம்.சி.ஐ.எஸ். லைஃப் மலேசியா காப்புறுதி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற அந்த மகளிர் மராத்தோன் போட்டியில் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா உள்பட 1,200 பேர் பங்கு கொண்டனர்.
‘சவாலை ஏற்போம்‘ எனும் கருப்பொருளிலான உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாம் ஆர்வத்துடனும் உறுதியுடனும் பங்கேற்றதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் துணைவியாருமான அவர் சொன்னார்.
தொடக்கத்தில் தினசரி 2 கிலோமீட்டர் எனும் அளவில் ஓட்டத்தை தொடக்கிய நான் சிறிது சிறிதாக வேகத்தை அதிகரித்து தொடர்ச்சியாக 30 நாடகளுக்கு தலா 8 கிலோ மீட்டர் ஓடினேன் என்றார் அவர்.
இவ்வாண்டு மகளிர் தின கருப்பொருளுக்கேற்ப சவாலை எதிர்கொள்ள தாம் உறுதிபூண்டதாக கூறிய அவர், தனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் இருந்த போதிலும் உடலாரோக்கியத்தைப் பேணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்தகைய போட்டிகள் சரியான களமாக விளங்குவதாக அவர் மேலும் கூறினார்.