புத்ரா ஜெயா, ஏப் 16- நீர் சேவையை கீழறுப்பு செய்ததாக சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிறுவன இயக்குநர் ஒருவரை 50,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வரை லிம் கியான் ஆய்க் என்ற அந்நபருக்கு ஜாமீன் வழங்க 2-1 என்ற பெரும்பான்மையில் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
நீதிபதி டத்தோ அஜிசா நவாவி தலைமையில் நீதிபதி சுப்பாங் லியான் மற்றும் நீதிபதி டத்தோ கசாலி சா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முறையீட்டை செவிமடுத்தது
நீதிபதி கசாலி இந்த மனுவை எதிர்த்த வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடல் நிலை கருதி சொஸ்மா சட்டத்தின் 13(2) பிரிவின் கீழ் அந்த மனுவை நீதிபதிகள் அஜிசா மற்றும் சுப்பாங் ஆகியோர் அனுமதித்தனர்.
லிம் கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதோடு மருத்துவ கோணத்தில் அவர் நோயாளி என வகைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுங்கை பூலோ சிறைச்சாலை கிளினிக்கின் மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்று நீதிபதி அஜிசா கூறினா.
இரு நபர் உத்தரவாதத்துடன் ஐம்பதாயிரம் வெள்ளி ஜாமீனில் லிம்மை விடுவித்த நீதிபதி, அவர் தனது பயண ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்திட வேண்டும் உத்தரவிட்டார்.
கடந்தாண்டு நவம்பர் 2ஆம் தேதிக்கும் 10ஆம் தேதிக்கும் இடையே எண்.32, ஜாலான் வேலோக்ஸ் 2, தாமான் வேலோக்ஸ் எனும் முகவரியில் உள்நோக்கத்துடன் நீர் சேவையில் கீழுறுப்பு செய்ததாக 43 வயதான லிம் மற்றும் குத்தகையாளரான ஆர். நாதன் ஆகியோர் மீது செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்ததாண்டு நவம்பர் 23ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.