தங்காக், ஏப் 19- பள்ளிகளை மூடுவதா என்பது குறித்து மாவட்ட சுகாதார இலாகா, கல்வியமைச்சு மற்றும் மாநில அரசாங்கம் கூட்டாக செய்யும் மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
எனினும், இந்த நோய்த் தொற்று ஆசிரியர்களை அல்லாமல் மாணவர்களை மட்டும் பாதித்திருந்தால் அப்பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.
நேற்று இங்கு மாவட்ட நிலையிலான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பரவல் காரணமாக பள்ளிகளை மூடுவதற்கு சுகாதார அமைச்சு உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 24ஆம் தேதி வரை மூடப்படும் என கிளந்தான் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் நிருபர்கள் அவரிடம் இந்த கேள்வியை எழுப்பினர்.