ஷா ஆலம், ஏப் 21– தகுதி உள்ள சிலாங்கூர்வாசிகள் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தில் (எஸ்.எம்.யு.இ.) பங்கேற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மரண சகாய நிதியாக 500 வெள்ளி மற்றும் ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு ஆகிய கூடுதல் அனுகூலங்களுடன் இந்த மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் ட த்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனுகூலங்களை அறிந்து கொள்ள http://e-mesra.yawas.my எனும் அகப்பக்கத்தை வலம் வரும்படி மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட மரண சகாய நிதி மீண்டும் தொடங்கப்படுவதாக மந்திரி புசார் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
யாவாஸ் திட்டத்தில் பதிந்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு மரண சகாய நிதியாக 500 வெள்ளி வழங்கும் திட்டத்திற்காக மாநில அரசு 75 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஜோம் ஷாப்பிங் திட்டத்திற்காக 2 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.