ஷா ஆலம், ஏப் 23- இங்குள்ள பெர்சியாரான் கெர்ஜாயா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்.ஆர்.டி. இலகு ரயில் கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட இயற்கை எரிவாயு கசிவு காரணமாக சுபாங்கிலிருந்து கிளேன்மேரி செல்லும் சாலை 25 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இதன் காரணமாக தெமாஸ்யா காசே முச்சந்தியில் இருந்து பால்ம் குரோ கட்டிடம் வரையிலான 350 மீட்டர் பகுதியில் ஒரே தடத்தில் இரு வழிப் பயணம் மேற்கொள்வற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு கசிவு தொடர்பான தகவலை தமது தரப்பு நேற்று பெற்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
உடைந்த அந்த குழாய் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டுச் செல்லும் பிரதான குழாய் ஆகும் என்று அவர் சொன்னார்.
வாகனமோட்டிகளின் பாதுகாப்பு கருதி அப்பகுதி முழுவதையும் போக்குவரத்துக்கு மூட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.