கோல சிலாங்கூர், ஏப் 24- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோவிட்-19 பெருந்தொற்று பரவும் பட்சத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பில் வழிகாட்டி ஒன்றை கல்வியமைச்சு வெளியிட வேண்டும் என்று சிலாங்கூர் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் நோய்த் தொற்று அதிகரிக்கும் சூழலில் பள்ளி நிர்வாகங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த வழிகாட்டி துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில், சிலாங்கூர்மாநிலத்திலுள்ள பள்ளிகள் சம்பந்தப்பட்ட நோய்த் தொற்று கட்டுப்பாட்டு சிறப்புக் குழு கல்வியமைச்சின் புதிய உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
பள்ளியில் ஒரு மாணவருக்கு நோய்த் தொற்று இருந்தால் பள்ளியை மூட வேண்டுமா? அல்லது 400 மாணவர்களுஇக்கு நோய் பீடித்தப் பின்னரே பள்ளியை மூட வேண்டுமா? என்று எங்களுக்கு தெரிய வேண்டும். இதனை விளக்கும் வழிகாட்டிக்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள கம்போங் பாரு பாசீர் பெனாம்பாங்கில் வீடமைப்புத் திட்டத்திற்கான சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, பேரிடர் பிரிவு ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய அந்த நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக் குழு நோய் அபாயம் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் மத்தியில் நோய்த் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து பந்திங், அறிவியல் இடைநிலைப் பள்ளியை இன்று தொடங்கி வரும் மே மாதம் 7ஆம் தேதி வரை மூடுவதற்கு கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.