கோலாலம்பூர், மே 6– கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் உண்மைக்கு மாறான செய்திகள் வெளியிடப்பட்டது தொடர்பில் 2021ஆம் ஆண்டு அவசர காலச் சட்டத்தின் (அத்தியாவசிய அதிகாரங்கள்) (எண் 2) கீழ் போலீசார் 12 விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர்.
மக்களிடையே அச்சமும் கவலையும் ஏற்படும் வகையில் உண்மைக்கு மாறான செய்திகளை வழங்கியது, வெளியிட்டது, அச்சிட்டது, விநியோகித்தது, பரப்பியது தொடர்பில் 2021ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் (அத்தியவசிய அதிகாரங்கள்) (எண் 2) கீழ் இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசீர் முகமது கூறினார்.
ஆகக் கடைசியாக முக நூல் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆடவருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 191 விமானம் இந்தியாவின் புது டில்லியிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்ததாக அவ்வாடவர் அந்த முக நூல் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த செய்தியில் உண்மை இல்லை எனக் கூறிய டத்தோ ஹூசீர், இத்தகையச் செய்திகள் கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மீது பொதுமக்களுக்கு சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்றார்.
மேலும் அரசாங்கத்தை இழிவுபடுத்தும் வகையிலான பதிவை தனது முக நூலில் வெளியிட்டது தொடர்பில் ஆடவர் ஒருவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 504வது பிரிவு, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லு டக சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விவாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினர்.
இந்தியாவிலிருந்து உருமாற்றம் கண்ட புதிய வகை தொற்று நாட்டிற்குள் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கான விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேசிய பாதுகாப்பு மன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி அறிவித்த பிறகு இவ்விரு பதிவுகளும் பகிரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.