ஷா ஆலம், மே 6– கோவிட்-19 நோய்த் தொற்றுத் தடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆறு மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அறிவித்தது சரியான நடவடிக்கையாகும் என்று சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் தெரிவித்தார்.
எனது தொகுதியான பண்டார் பாரு பாங்கி பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்கு ஒன்று கூடும் இடமாக திகழ்கிறது. நோய்ப் பரவல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லையோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்துகிறது.
பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதில் அமலாக்க அதிகாரிகள் உரிய பங்கினை ஆற்றுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் தொடர்பில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க இதன் தொடர்பில் சரியான மற்றும் ஆகக்கடைசி நிலவரங்களை தெரிந்து கொள்ளும்படி பொதுமக்களை பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.
பொது முடக்க காலத்தில் உதவிப் பணிகள் வட்டார மக்கள் பிரதிநிதிகள் மூலம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.
நோன்புப் பெருநாளின் போது உறவினர் இல்லங்களுக்குச் செல்லும் போது எஸ்.ஒ.பி. விதி மீறல் அதிகம் நிகழும் சாத்தியம் உள்ளதாக தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் ஷம்சுல் பிர்டாவுஸ் முகமது கூறினார்.
எஸ்.ஒபி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படும் பட்சத்தில் 15 பேர் ஒன்று கூடினாலும் பாதகமில்லை. வருகை நேரத்தை அனைவரும் குறைத்துக் கொள்வர் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
பொது முடக்க காலத்தில் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தாம் உணர்ந்துள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இத்தகைய சூழலில் வணிகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை இணையம் வாயிலாக மேற்கொள்ள தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கு உதவுவதற்கான நிதி ஒதுக்கீடு தங்கள் வசம் உள்ளதால் அத்தரப்பினர் உதவிக்காக தங்கள் சேவை மையத்திற்கு வரலாம் என்றும் அவர் சொன்னார்.