கோலாலம்பூர், மே 25- எல்.ஆர்.டி. எனப்படும் இலகுரயில் தடத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் விரிவான விசாரணையை நடத்தும்படி போக்குவரத்து அமைச்சு மற்றும் பிராசாரானா மலேசிய பெர்ஹாட் நிறுவனம் ஆகிய தரப்பினருக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறியும் அதே வேளையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இச்சம்பவத்தை நான் கடுமையாக கருதுகிறேன். இதன் தொடர்பில் போக்குவரத்து அமைச்சும் பிராசாரானா நிறுவனமும் விரிவான விசாரணையை நடத்தி விபத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றார் அவர்.
இரு இரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் நாம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில் இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விஷயத்தில் அனைத்து தரப்பினரும் அதிக கவனமும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 213 பயணிகள் காயங்களுக்குள்ளான வேளையில் அவர்களில் 47 பயணிகளுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைனால் அப்துல்லா கூறினார்.
கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. நிலையம் மற்றும் கம்போங் பாரு எல்.ஆர்.டி. நிலையத்திற்கு இடையே சுரங்கப் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது. பயணிகளை ஏற்றிய இரயிலும் பழுதடைந்த இரயிலும் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.