HEALTHMEDIA STATEMENTNATIONAL

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்பது ஊரடங்குச் சட்டம் அல்ல- ஐ.ஜி.பி. விளக்கம்

கோலாலம்பூர், ஜூன் 1– அரசாங்கம் இன்று தொடங்கி அமல்படுத்தியுள்ள முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஊரடங்குச் சட்டம் அல்ல எனறு  தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா தெளிவுபடுத்தினார்.

இது ஊரடங்குச் சட்டம் அல்ல. எந்த காரணமும் இன்றி வெளியில் செல்வதிலிருந்து பொது மக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையே இதுவாகும் என்று அவர் சொன்னார்.

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படாது. எனினும், வர்த்தக மையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இரவு 8.00 மணிக்கு பிறகு மூடப்படும் என்றார் அவர்.

இதன் வழி இரவு வேளைகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் வெறுமனை சுற்றித் திரிவதற்கும் எந்த இடமும் இருக்காது. ஆகவே அவர்கள் வீட்டிலேயே இருப்பது உசிதமாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே பயணிக்க பொது மக்கள் அனுமதிக்கப்படுவர். பத்து கிலோ மீட்டரைத் தாண்டினால் அவர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறையை மீறியதாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசியமான காரணங்கள் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வெளியில் செல்லும் போது தங்களின் வசிப்பிடத்தை நிரூபிப்பதற்கான ஆதாரமாக மின்சார, நீர் கட்டண பில்களை உடன் கொண்டுச செல்ல வேண்டும் என்றார் அவர்.

 


Pengarang :