கோலாலம்பூர், ஜூன் 23– முக்கிய தேர்வுகளை எழுதும் மாணவர்களை தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிலை அமல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே பள்ளிக்குச் செல்ல அனுமதிப்பது தொடர்பான பரிந்துரையை கல்வியமைச்சு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் முன்வைத்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தும்படி கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவிடம் கல்வியமைச்சு விண்ணப்பித்துள்ளதாக மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
எனினும், இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கே உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தையும் சிறப்புக் குழுவால் எளிதில் மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பள்ளியில் அல்லது வேறு இடத்தில் மேற்கொள்வது குறித்து தாங்கள் விவாதித்து வருவதாகவும் இவ்விவகாரம் தொடர்பில் விரிவான ஆய்வு தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய மீட்சித் திட்டம் தொடர்பாக இயங்கலை வாயிலாக நடைபெற்ற விவாத நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.
இதுவரை, 148,580 ஆசிரியர்கள் அதாவது மொத்த ஆசிரியர்களில் 36 விழுக்காட்டினர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.