ஷா ஆலம், ஜூலை 1– மக்கள் பரிவுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக செலாயாங் நகராண்மைக் கழகம் இவ்வாண்டு தொடங்கி இதுவரை 320,000 வெள்ளியை செலவிட்டுள்ளது.
நகராண்மைக் கழகத்தில் உள்ள 24 மண்டலங்களைப் பிரதிநிதிக்கும் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உதவி நல்கப்படுவதாக நகராண்மைக் கழக இடைக்காலத் தலைவர் செரேமி தர்மான் கூறினார்.
உணவு வங்கி, கோவிட்-19 சுய பரிசோதனை கருவி , காய்கறி உள்ளிட்ட சமையல் பொருள், முகக்கவசம் மற்றும் உணவு பொருள், வெப்பமானி கருவில் உள்ளிட்ட பொருள்கள் இந்த பரிவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர, சிறு வியாபாரிகளுக்கு உதவுவதற்கும் நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு ஏதுவாக கிருமி நாசினி தெளிப்பதற்கும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.
மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டங்களின் வாயிலாக இதுவரை அனைத்து இனங்களையும் சேர்ந்த சுமார் ஆறாயிரம் பேர் பலனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.