ஷா ஆலம், ஜூலை 1– செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 1,254 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவற்றில் 5 பெரிய அளவிலான மெகா தடுப்பூசி மையங்கள், சமூக மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 தடுப்பூசி மையங்கள், 15 செல்கேர் கிளினிக்குகள், 1,228 கிளினிக்குள் ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
செல்வேக்ஸ் ஏற்பாடு செய்துள்ள மெகா தடுப்பூசி செலுத்தும் மையங்கள், சமூக மண்டபங்கள், செல்கேர் கிளினிக்குகள் மற்றும் கிளினிக்குகளில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத சுமார் ஐயாயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக தினசரி 43,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
தடுப்பூசி விநியோக மற்றும் உத்தரவாத சிறப்பு பணிக் குழுவிடமிருந்து மேலும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலத்திற்கு கிடைத்தவுடன் ஜூலை மாதத்தில் தினசரி 135,000 பேருக்கும் ஆகஸ்டு மாதம் 165,000 பேருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.
செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றவர்களின் விபரங்கள் சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் வழி தடுப்பூசி செலுத்துவதற்கான முன் பதிவு மற்றும் தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இடையே ஒன்றுக்கொன்று மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.