புத்ரா ஜெயா, ஆக 12- தேசிய மீட்சித் திட்ட அமலாக்க காலத்தின் போது முஸ்லீம் அல்லாதோருக்கான வழிபாட்டுத் தலங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு வரையறுத்துள்ளது.
தேசிய மீட்சித் திட்டத்தின் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாநிலங்களில் சமய நடவடிக்கைகளுக்காக வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியது.
வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் மற்றும் இதர வழிபாடுகள் அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக அது தெரிவித்தது.
தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மாறியுள்ள மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்களின் பரப்பளவுக்கேற்ப இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை அமையலாம். இம்மாநிலங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகர் 2.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் செயல்பட முடியும்.
முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்கள் என்பது இரண்டு டோஸ் பைசர், அஸ்ட்ராஸேனேகா மற்றும் சினோவேக் தடுப்பூசிகளைப் பெற்றவர்களைக் குறிக்கும் என அமைச்சு தெளிவுபடுத்தியது. இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்று 14 நாட்களைக் கடந்தவர்களே வழிபாட்டுத் தலங்களுக்கு வர முடியும் என்றும் அது குறிப்பிட்டது.
அதே சமயம், ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்படும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் மற்றும் கேன்சினோ வகை தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசி பெற்ற 28 தினங்களுக்கு பின்னர் வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படுவர்.
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ரா ஜெயா ஆகிய மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இன்னும் உள்ளன.