ஷா ஆலம், ஆக 13- புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் வியாபார உபகரணங்களை வழங்கும் வழங்கும் திட்டத்திற்கு இவ்வாண்டில் இதுவரை 413 விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசு அங்கீகரித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை பொருளாதார ரீதியில் மீட்சியுறச் செய்வதை இலக்காக கொண்ட ஏழ்மை ஒழிப்பு பெருந்திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படுவதாக சமூக பொருளதார மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவர்கள் விரைவில் வர்த்தக உபகரணங்களைப் பெறுவர். கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட 269 விண்ணப்பங்களுக்கு கூடுதலாக இந்த உதவித் திட்டம் அமைகிறது என்றார் அவர்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,100 வணிகர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் 400 வெள்ளி ரொக்கத் உதவித் தொகை இதில் உள்ளடங்கவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
நோய்த் தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் சுமையை ஓரளவு குறைக்கவும் வியாபாரத்தின் வழி வருமானத்திற்கான மாற்று வழியை அவர்கள் மேற்கொள்ளவும் இத்திட்டம் துணை புரியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மக்கள் வறுமையிலிருந்து மீள்வதை உறுதி செய்யவும் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்கள் வர்த்தகத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டையும் அவர் மறுவுறுதிப்படுத்தினதார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் இந்த சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு அவர்களின் வர்த்தக தேவைக்கேற்ப உபகணரங்கள் வழங்கப்படுகின்றன.
இலக்காக கொள்ளப்பட்ட தரப்பினரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்திற்கு வருடந்தோறும் 20 லட்சம் வெள்ளி மானியம் ஒதுக்கப்படுகிறது.