கோலாலம்பூர், ஆக 16- கடந்த மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடருடன் தொடர்புடைய மேலும் ஐந்து கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் சேர்த்து நாடாளுமன்றக் கூட்டம் தொடர்புடைய பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரின் வாயிலாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டது இம்மாதம் 13 ஆம் தேதி கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்
அவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் என்றும் நோய்த் தொற்றுக்கான லேசான அறிகுறியைக் கொண்ட அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஐவருடன் சேர்த்து நாடாளுமன்றக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
அந்த 30 பேரில் இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். மேலும் ஒன்பது பேர் அவர்களுடன் உடன் சென்றவர்கள். மேலும் எழுவர் குடும்ப உறுப்பினர்கள். இது தவிர இரு குத்தகையாளர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்றப் பணியாளர் ஆகியோரும் இதில் அடங்குவர் என அவர் மேலும் சொன்னார்.
இது தவிர மேலும் 56 பேர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட கோவிட்-19 சோதனை வாயிலாகவும் எண்மர் மேலவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலும் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட வேளையில் மேலும் எண்மர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாவர் என்று அவர் குறிப்பிட்டார்.